ரேஷன் கடையில் மோடி போட்டோ.. பாஜகவினர் 23 பேர் கைது..!
ரேஷன் கடையில் மோடி போட்டோ.. பாஜகவினர் 23 பேர் கைது..!
மத்திய அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் பாஜக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பிரதமர் மோடி படத்தை வைக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அங்கு, சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை விநியோகித்ததோடு, பிரதமர் மோடியின் படத்தை ரேஷன் கடையில் வைக்க முயன்றனர். இதை அறிந்து அங்கு வந்த திமுகவினர் எதிர்ப்பு கோஷம் எழுப்ப, பதற்றம் உருவானது.
இதையடுத்து அங்கு, பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துடன், அனுமதியின்றி ஒரே இடத்தில் கூடியதாக பாஜகவினர் 23 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இது குறித்து சுரேஷ் பாபு கூறுகையில், “'பிரதமரின் படத்தை அனைத்து அரசு அலுவலகம், ரேஷன் கடைகளில் வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இங்கு வந்தோம். போலீசார் அனுமதி மறுத்து கைது செய்தது கண்டனத்துக்குரியது” என்றார்.