உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பபிதா (45) என்ற பெண்ணுக்கும் பஞ்சாபை சேர்ந்த ஷாம் லால் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தையடுத்து, பஞ்சாபில் குடியேறிய இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று, அவரது மகன் காணாமல் போனார். வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய கணவர் மகனை பற்றி கேட்கையில், கடைசியாக வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் போது பார்த்ததாக பபிதா தெரிவித்தார்.
சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால், ஷாம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் இறங்கிய காவல் அதிகாரிகள், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அப்போது பபிதா ஒரு சாக்குமூட்டையை தலையில் சுமந்து கொண்டு சென்ற பதிவாகியிருந்தது. இதையடுத்து பபிதா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் திரும்பியது. பின்னர் அவரை பிடித்து விசாரிக்கையில், தனது மகனை தானே கழுத்தை நெரித்து கொலைசெய்ததாக கூறினார்.
மேலும் சிறுவனின் சடலத்தை ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டி தலையில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றதாகவும், பிறகு பக்கத்திலிருந்த குளத்தில் உடலை போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 6 வயது பெண் குழந்தையை தானே கொன்றதாகவும், அதன்பிறகு இரண்டு முறை கற்பமுற்றிந்தபோதும், தனது வயிற்றில் தானே அடித்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணுக்கு மன நிலை சரியில்லாமல் இருப்பதால், அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
newstm.in