UPS-இல் தீப்பிடித்து தாய், மகள்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!
UPS-இல் தீப்பிடித்து தாய், மகள்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!
கோவையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி அம்மா, மகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு அர்ச்சனா, அஞ்சலி என இரு மகள்கள். விஜயலட்சுமியின் கணவர் ஜோதி லிங்கம் 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
விஜயலட்சுமியின் ஒரு மகள் ஐடி நிறுவனத்திலும் மற்றொருவர் பைனான்ஸ் தொழிலும் செய்துவருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைத்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பெண்ணும், அவரது அம்மாவும் படுக்கை அறையில் மற்றொரு பெண்ணும் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ்-லிருந்து பிடித்த தீயை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் அங்கு பரவிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அஞ்சலி மற்றும் அம்மா விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் பலியாகியுள்ளது. இச்சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in