ஆசிரியர் தம்பதி படுகொலை – 7 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை!!
ஆசிரியர் தம்பதி படுகொலை – 7 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் (72) - ஜோதிமணி (65) தம்பதி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுடைய மகன் சதீஷ், சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டில் சங்கரபாண்டியன், அவருடைய மனைவி ஜோதிமணி ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். இவர்களது வீட்டுக்கு நேற்று பிற்பகலில் உறவினர்கள் சிலர் வந்தனர். அப்போது கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது சங்கரபாண்டியனும், ஜோதிமணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். உடனடியாக இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சங்கரபாண்டியன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ஜோதிமணி கீழே விழுந்த நிலையிலும் பிணமாக கிடந்தனர். மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதியரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in