மதிய உணவு திட்டத்தின் பெயர் மாற்றம்.. விரைவில் அரசாணை.. முதல்வர் அறிவிப்பு..!
மதிய உணவு திட்டத்தின் பெயர் மாற்றம்.. விரைவில் அரசாணை.. முதல்வர் அறிவிப்பு..!
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவக்குமார சுவாமி. பக்தர்களால் நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்ட அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 111-வது வயதில் இறந்தார்.
இந்நிலையில், அவருடைய 115-வது ஜெயந்தியையொட்டி குரு வந்தனா (குருவுக்கு மரியாதை செலுத்துதல்) விழா சித்தகங்கா மடத்தில் நேற்று (1-ம் தேதி) நடைபெற்றது.
இதில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, குரு மரியாதை செலுத்தி பேசும்போது கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி தாசோக தினமாக (கூட்டாக அமர்ந்து சாப்பிடும் தினம்) கொண்டாடப்படும்.
ஏழை குழந்தைகளுக்கு சிவக்குமார சுவாமி இலவச உணவு, கல்வி, தங்குமிடம் வழங்கினார். அவரது இந்த சேவையை போற்றும் விதமாக, மாநில அரசின் மதிய உணவு திட்டத்திற்கு மடாதிபதி சிவக்குமார சுவாமியின் பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.
அவர் இந்த மடத்தில் 98 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். அவர் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களை அதாவது உணவு, கல்வி, தங்குமிடம் வழங்கினார். இதை வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
சிவக்குமார சுவாமியின் பாதையில் பயணிக்கும் வகையில் அனைவருக்கும் உணவு, கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய எனது அரசு உறுதி பூண்டுள்ளது” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார்.