#BREAKING:- நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!
#BREAKING:- நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது. இந்தக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக வெளிநடப்பு செய்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக, காங்கிரஸ், புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையை தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தீர்மானத்தை இன்றே அனுப்பி வைக்கப்படும் என அறிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, நாள் குறிப்பிடாமல் பேரவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தோ்வை விலக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கைக்காக நீட் தோ்வின் தேவையை விட்டுவிட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்த மசோதாவை கடந்த 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆா்.என்.ரவி.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.