இந்தியாவில் புதிய விமான சேவை.. டிஜிசிஏ-விடம் உரிமம் பெற்றது ஆகாஷா ஏர்..!
இந்தியாவில் புதிய விமான சேவை.. டிஜிசிஏ-விடம் உரிமம் பெற்றது ஆகாஷா ஏர்..!
பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள ஆகாஷா ஏர் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) உரிமத்தைப் பெற்றுள்ளது.
இதன் மூலம், அந்த நிறுவனம் விரைவில் விமான சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஆகாசா ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நோக்கில் ‘ஆகாஷா ஏர்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில், பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு பங்குகளை முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர்.
இந்தியாவில் விமான போக்குவரத்து அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற கண்ணோட்டத்தில் ஆகாஷா தொடங்கப்பட்டது.
வரும் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், மிகவும் குறைந்த கட்டணத்தில் சுமார் 18 விமானங்களை இந்தியாவில் இயக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தங்கள் முதல் விமானத்தை இந்த (ஜூலை) மாதத்திற்குள் இயக்கும் எனத் தெரிகிறது. கடந்த மே மாதம், விமானத்தின் முதல் படத்தை பகிர்ந்திருந்தது ஆகாஷா.
2022 - 2023-ம் ஆண்டில் மொத்தம் 18 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. படிப்படியாக, வருடத்திற்கு 12 முதல் 14 வரை என ஐந்து ஆண்டுகளில் 72 விமானங்களை இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.
அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பகுதியில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.