விசாரணையின் போது கோக் குடித்த போலீஸ் அதிகாரிக்கு நூதன தண்டனை!!
விசாரணையின் போது கோக் குடித்த போலீஸ் அதிகாரிக்கு நூதன தண்டனை!!
ஆன்லைன் விசாரணையின்போது கோகோ கோலா குடித்த போலீஸ் அதிகாரியை கண்டித்த நீதிபதிகள், அவருக்கு நூதன தண்டனையை விதித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக தற்போது ஒருசில மாநிலங்களில் நீதிமன்றங்கள், ஆன்லைன் வழியாக வழக்குகளை விசாரித்து வருகின்றன. அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் சாலையில் இரு பெண்களை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தாக்கியதாக கூறப்படும் வழக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனு மீதான விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றபோது, காவல் ஆய்வாளர் ரத்தோட் என்பவர் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது அவர் கோகோ கோலா குடிப்பதை பார்த்த நீதிபதி அரவிந்த் குமார், ரத்தோட் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞரிடம், ஒரு போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தில் இப்படிதான் ஆஜர் ஆவாரா, நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடைபெற்றால் அவர் கேனுடன் வருவாரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘அவர் கோகோ கோலா ரத்தோட்’ என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இதற்கு முன்பாக ஆன்லைன் விசாரணையின்போது சமோசா சாப்பிட்ட வழக்கறிஞரிடம் சமோசாவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று நீதிபதிகள் குறிப்பிட்டதை நினைவுக் கூர்ந்த நீதிபதி அரவிந்த் குமார், ‘நீங்கள் சாப்பிடுவதற்கு நான் ஆட்சேபனை கூறவில்லை.
ஆனால், எங்கள் முன்னால் சாப்பிட கூடாது. இது பிறரையும் தூண்டிவிடும். எனவே, காவல் ஆய்வாளர் ரத்தோட் 100 கொகா கோலா குளிர்பானங்களை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
newstm.in