உக்ரைனுக்காக போர்களத்தில் இறங்கிய புதுமணத் தம்பதி..!!

உக்ரைனுக்காக போர்களத்தில் இறங்கிய புதுமணத் தம்பதி..!!

Update: 2022-03-02 20:59 GMT

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷ்ய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷ்ய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷ்ய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.

இந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை வீசப்பட்டது.

அதே போல் கிவ் நகர் அருகே உள்ள எரிவாயு குழாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் எரிவாயு குழாயில் இருந்து நச்சுபுகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றும் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் தொடர்ந்து சண்டைகள் நடந்தன.

இந்த நிலையில் ரஷ்யா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ரஷ்யாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து இருந்தது.

ஆனால் நள்ளிரவு முதல் ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

போர்களத்தில் யாரினா அரிவா மற்றும் ஸ்வியாடோஸ்லாவ் பர்சின் புதுமண தம்பதிகள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்து உள்ளனர். இந்த ஜோடி மே மாதம் திருமணம் செய்யவிருந்தது, ஆனால் ரஷ்யா படையெடுத்தபோது கடந்த வாரம் கீவில் திருமணம் செய்து கொண்டனர்.

பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு, துப்பாக்கியை ஏந்தியபடி முற்றுகைக்கு உட்பட்ட ஒரு நகரத்தில் தங்களுடைய தேனிலவைக் கழிப்பதைப் பற்றியும், ரஷிய படைகள்  தங்கள் தாய்நாட்டை ஆக்கிரமிப்பதற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாகவும் கூறி உள்ளனர்.

இதுகுறித்து அரிவா  கூறியதாவது, “எங்களிடம் உள்ள இந்த புதிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது கடினம். இது வசந்த காலத்தின் முதல் நாள் என்றும், பொதுவாக மக்கள்  உக்ரைனின் தேசிய மலலான சூரியகாந்தியை விதைப்பார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் ரஷியாவின் தாக்குதலை எதிர்ப்பார்கள்.

இங்கே யாரும் தோற்று விடுவோம் என்று சொல்லவில்லை, அழவில்லை. இங்கு அனைவருக்கும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது எல்லாம் காலத்தின் கேள்வி. எனவே, இந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள், உண்மையில் போராடத் தயாராக இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் நிலத்துக்காக உயிர் துறக்கவும் தயாராக உள்ளனர். இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை” என கூறினார்.

பர்சின் கூறியதாவது, “எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஒரே இடத்தில் கூட்டி ஒரு நல்ல கிளாஸ் ஒயின் அருந்தக்கூடிய நேரம் விரைவில் வரும் என்று நம்புகிறேன். எல்லோரிடமும், போர் முடிந்துவிட்டது, நாங்கள் வென்றோம் என்று சொல்லுங்கள். உலகின் சுதந்திரத்திற்காக நாங்கள்  போராடுகிறோம் என்பதை ரஷ்யா மக்கள் உட்பட இந்த உலகில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

உக்ரைனுக்கு பணம், உணவு, ஆயுதங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் மற்றும் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை தம்பதியினர் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News