கனியாமூரை அடுத்து கீழச்சேரி.. பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கு மாட்டி தற்கொலை..!
கனியாமூரை அடுத்து கீழச்சேரி.. பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கு மாட்டி தற்கொலை..!;
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசணம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களின் ஒரே மகள் சரளா (17).
இவர், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை, வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக மாணவியர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அந்த மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவி தற்கொலை குறித்து எஸ்பி பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் பிளஸ் 2 மாணவி சரளா விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.