இனி, எலித் தொல்லை இருக்காது.. ஒழிக்க களம் இறங்குது தமிழக அரசு..!
இனி, எலித் தொல்லை இருக்காது.. ஒழிக்க களம் இறங்குது தமிழக அரசு..!
தமிழகத்தில், பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் அடங்கிய மூட்டைகளை எலிகள் கடித்துக் குதறி பாழாக்குகின்றன. இதனால், உணவு தானியங்கள் வீணாகி அரசுக்கு கோடிக்கணக்கிலான ரூபாய் நஷ்டம் ஆகிறது.
இந்நிலையில், உணவுத் துறையின் கீழ் செயல்படும் தமிழக சேமிப்பு கிடங்கு நிறுவனம், தங்கள் கிடங்குகளில் உணவுப் பொருட்களை பாதுகாக்க பூச்சி தடுப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இதனால், ரேஷன் கடைகளில் எலிகளை ஒழிக்க, சேமிப்பு கிடங்கு நிறுவனத்துடன் கூட்டுறவுத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ரேஷன் கடைகளில் எலிகளையும், பூச்சிகளை ஒழிக்க சேமிப்பு கிடங்கு நிறுவனம் வாயிலான நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தங்களது மண்டலங்களில் உள்ள கடைகளில் முகவரி, விற்பனையாளர் பெயர், மொபைல் போன் எண், கூட்டுறவு சார்பதிவாளர், ஆய்வாளர் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.