பாகிஸ்தானில் வேண்டாம்.. இந்திய மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு
பாகிஸ்தானில் வேண்டாம்.. இந்திய மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு
இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் எல்லைப்பிரச்னை இருப்பது உலகமே அறிந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 200 இந்திய மாணவர்கள் படிப்பதாக கடந்த 2020ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிப்பதற்கு முன்னதாக அவர்கள் பாகிஸ்தான் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு படிக்கச் சென்றால் வேலையோ, உயர்கல்வியோ இந்தியாவில் கிடைக்காது என இந்திய மாணவர்களை உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ எச்சரித்துள்ளன. இந்தியாவின் உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவை வெள்ளிக்கிழமை கூட்டாக ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்திலும் சேர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். நாட்டில் வேலை தேடுவதற்கு அல்லது உயர் கல்வியைத் தொடர தகுதியுடையவராக இருக்க பாகிஸ்தானில் படித்திருக்கக் கூடாது. சீனாவில் படிப்பதற்கு எதிராக இந்திய மாணவர்களை யூஜிசி கடந்த மாதம் எச்சரித்த நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் படிக்கக் கூடாது என யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றாலும் இந்த மோதல் போக்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், AICTE உறுப்பினர் செயலாளரும் UGC செயலாளரும் வெளியிட்ட அறிக்கையில் 'உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள், என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்லூரியில்/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டவரும் அல்லது இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை தேடுவதற்கு அல்லது உயர்கல்வி பெறத் தகுதி பெற மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்ற மற்றும் இந்தியாவினால் குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகள், MHA இலிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற்ற பிறகு, இந்தியாவில் வேலை தேடத் தகுதியுடையவர்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in