தற்கொலை அல்ல.. ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொலை
தற்கொலை அல்ல.. ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொலை
தற்கொலை வழக்கில் திருப்பமாக, ஒரே குடும்பத்தில் 9 பேரும் மந்திரவாதி உள்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மாய்சல் கிராமத்தை சேர்ந்தவர் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா (49). இவரது சகோதரர் ஆசிரியர் போபட் எல்லப்பா (54), 74 வயதான தாய், மனைவிகள், 4 குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் டாக்டர் மாணிக் எல்லப்பா உள்பட அக்குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் அடுத்தடுத்து உள்ள 2 வீடுகளில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இந்த குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கடன் தொல்லை கொடுத்ததாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 13 பேரை கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணையில் அதிரடி திருப்பமாக குடும்பத்தினர் 9 பேரும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளளது. மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் (39) மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
இறந்த குடும்பத்தினரிடம் இருந்து "மறைக்கப்பட்ட புதையல்" ஒன்றைக் கண்டுபிடிப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து 1 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் அவர்கள் கூறிய படி, புதையலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பணத்தை அந்த குடும்பத்தினர் திரும்ப கேட்டதால், அவர்களை கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மாந்திரவாதியும், அவரது கூட்டாளியும் மறைந்திருக்கும் புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்வதாகக் கூறி, அவர்கள் குடும்ப உறுப்பினர்களை மொட்டை மாடிக்கு வரவழைத்துள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து, விஷம் கலந்த தேநீரை உட்கொள்ள செய்தனர் என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in