பிப்ரவரி 16 முதல் நர்சரி பள்ளிகள் திறப்பு! தமிழக அரசு அறிவிப்பு!!
பிப்ரவரி 16 முதல் நர்சரி பள்ளிகள் திறப்பு! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு கடுமையாகத் தாக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதை அடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா நிலவரம் மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை அடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, வரும் 16 ஆம் தேதி முதல், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
newstm.in