அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்..காயத்துடன் வெளியே வந்த நிர்வாகி..!!

அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்..காயத்துடன் வெளியே வந்த நிர்வாகி..!!

Update: 2022-06-19 04:35 GMT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வெடிக்கத் துவங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்த போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஜெயக்குமார், சண்முகம் ஆகியோருடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில், மூத்த நிர்வாகிகளுடன், ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் கலந்துக் கொண்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.

அதேபோல், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் வந்த முன்னாள் பெரம்பூர் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரத்த காயத்துடன் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெரம்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து, எடப்பாடி ஆளா? என்று கேட்டுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Similar News