ஒரு பக்கம் எதிர்ப்பு.. மறுபக்கம் அக்னிபாத் திட்டத்தில் சேர இத்தனை லட்ச இளைஞர்கள் விண்ணப்பம் !!
ஒரு பக்கம் எதிர்ப்பு.. மறுபக்கம் அக்னிபாத் திட்டத்தில் சேர இத்தனை லட்ச இளைஞர்கள் விண்ணப்பம் !!
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் 17 முதல் 21 வயதுள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்வதற்காக, அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் மூலம் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதன்பின்னர் அவர்களில் 25% பேர் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்களுக்கு ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை ரொக்கம் வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் வன்மமுறை வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை வாபஸ்பெற இயலாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இப்படி ஒருபக்கம் எதிர்ப்பு எழுந்திருக்கும் அதேநேரத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கபட்டன. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாக அக்னிபாத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் இளைஞர்கள் சேர கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஏராளமானோர் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனர். விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை உடன் முடிவடைந்தது.
இதற்கு முன்னர் விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் சேர்க்கை நடந்த போது 6 லட்சத்து 31,528 பேர்தான் அதிகபட்சமாக விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அக்னிபாத் திட்டத்தின் கீழ் தற்போது 7 லட்சத்து 49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் விமானப் படை வரலாற்றிலேயே அதிகபட்சமாகும், என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
newstm.in