ஒருவழியாக தொடங்கியது.. ரயில் பயணிகள் மீண்டும் உற்சாகம்
ஒருவழியாக தொடங்கியது.. ரயில் பயணிகள் மீண்டும் உற்சாகம்
கொரோனா பரவல் தீவிரமடைந்த காலக்கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறிப்பாக பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டன. சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களும் வெளியூர்களுக்கு செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
அந்த வகையில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த பல்வேறு பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் தற்போது ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்குப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாதாரண பயணிகள் ரயிலுக்கு பதிலாக தினசரி விரைவு ரயில் போக்குவரத்து வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி ரயில் புறப்பட்டு சென்றது.
இதில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். தினந்தோறும் விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கும், மாலை 5.50 மணிக்கும் விரைவு ரயில் புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது. அதே போல் மறு மார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து காலை 8.10 மணிக்கும், இரவு 8.35 மணிக்கும் விழுப்புரத்திற்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. புதுச்சேரிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in