ஆன்லைன் செக்ஸ் சாட்.. ரூ.1 லட்சத்தை இழந்ததால் ஐ.டி. ஊழியர் தற்கொலை !!
ஆன்லைன் செக்ஸ் சாட்.. ரூ.1 லட்சத்தை இழந்ததால் ஐ.டி. ஊழியர் தற்கொலை !!
இன்றைய டிஜிட்டல் காலத்தில் இளைஞர்களையும், சிறுவர்களையும் மையப்படுத்திய சில செயலிகள் சுற்றிவருகிறது. இதனால் அவர்களை ஆன்லைனில் அடிமையாக்குவதோடு, லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்து விடுகிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பலரும் அலட்சியம் செய்வதால் பணத்தை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த தடி ஜெயசூர்யா(22) என்ற இளைஞர், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்காக நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
இளைஞர் ஜெயசூர்யா வேலைக்கு வராததால் அறைக்கு சென்று அவரது நண்பர் ஒருவர் பார்த்தபோது, ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜெயசூர்யா உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் தெரியவந்தது. அந்த செயலியை ஜெயசூர்யா டவுன்லோடு செய்துள்ளார். அதில் ஏராளமான மாடல் அழகிகளின் கவர்ச்சி புகைப்படங்கள் இருந்துள்ளது. அந்த அழகிகளுடன் ஜாலியாக பேசுவதற்கு, பழகுவதற்கு, உல்லாசமாக இருப்பதற்கு என தனித்தனியாக பணம் நிர்ணயித்துள்ளனர்.
அதாவது, ஒரு மணி நேரத்துக்கு ரூ.2500 முதல் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாகவும், அவற்றில் சில அழகிகளின் பெயரில் ஜெயசூர்யா பணத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் சென்ற பின்னர் செயலியில் இருந்து உரிய பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் மீண்டும், மீண்டும் அந்த செயலியில் உள்ள பல்வேறு அழகிகளின் பெயரில் பணத்தை கட்டி ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரை கட்டி உள்ளார்.
ஆனால் எந்த பதிலும் அவருக்கு வரவில்லை. மாறாக பணத்தை மொத்தமாக இழந்துவிட்டார். அதன் பின்னர் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். காலையில் அவர் செயலியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் கட்டிய பணத்தை மட்டுமாவது திரும்ப தந்து விடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற ஏமாற்று செயலிகளையும் ஆபாச செயலிகளையும் முடக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in