ஒருவருக்கு தான் கொரோனா.. ஒட்டுமொத்த நகரத்துக்கே ஊரடங்கு விதித்த சீனா !!
ஒருவருக்கு தான் கொரோனா.. ஒட்டுமொத்த நகரத்துக்கே ஊரடங்கு விதித்த சீனா !!;
சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியது. அதன்பின்னர் சிறிது நாட்களிலேயே பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தற்போது 228 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்று முதல் இன்று வரை கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ உலகம் போராடி வருகிறது.
அதேநேரத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும் சீனாவில் அவ்வப்போது பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கொரோனா முதல் அலையை சமாளித்த சீனா, தற்போது ஓமைக்ரான் அலையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது. சீனாவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே ஊரடங்கு அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது. இந்த நடைமுறையால் அந்நாட்டின் குடிமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் எனவும், பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது எனவும் புகார் எழுந்து வருகிறது. எனினும் அதனை அரசு கவனத்தில் கொள்வது இல்லை.
இந்நிலையில் அந்நாட்டின் வுகேங்க் என்ற நகரில் ஒரு நபருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் அந்நகரத்திற்கு ஒட்டுமொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் தடுப்பு நோக்கில் அந்நகரத்தை சேர்ந்த யாரும் வரும் வியாழக்கிழமை வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது.
அந்நாட்டின் மிகப் பெரிய உருக்கு ஆலை இந்த வுகேங்க் நகரில் தான் உள்ளது என்பதால் உருக்கு ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் பல்வேறு நகரங்களில் இது போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்நாட்டின் தினசரி பாதிப்பு 300இல் இருந்து 400 ஆக உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக சுமார் 25 கோடி மக்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in