பரபரப்பு.. அரசு மருத்துவமனையில் தீ.. அலறியடித்து ஓடிய நோயாளிகள்..!

பரபரப்பு.. அரசு மருத்துவமனையில் தீ.. அலறியடித்து ஓடிய நோயாளிகள்..!

Update: 2022-02-22 10:06 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு அருகில் மேற்கொள்ளப்பட்ட வெல்டிங் பணியின் போது தீப்பொறி விழுந்து ஆக்சிஜன் குழாய்களில் தீப்பற்றியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், யாருக்கும் பாதிப்பில்லை.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்கள் குழந்தைகளுடன் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவ பிரிவில் பிரசவ வார்டு இயங்கி வருகிறது.


இந்நிலையில், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டடத்தை அதிகரிக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் குளிர்சாத வசதிக்காக வெல்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.

வெல்டிங் வேலையின் போது எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் குழாய் மீது தீப்பொறி பட்டவுடன் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனால், அருகில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

தகவலறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்தனர். சாதுர்யமாக ஊழியர்களே தீயை அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது; யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து, தீயணைப்பு போலீசார் மற்றும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Similar News