காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி..!!

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி..!!

Update: 2022-02-12 04:30 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சர்கள் தலைமையில் மாவட்டம் தோறும் திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேச்சைகளும் தங்களது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதேவேளையில் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காலை 6 முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வழிகாட்டுதல்களை நெறிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை, பிரசாரம்  செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News