ஓசியில் பயணிக்கும் போலீசார்.. நடவடிக்கை எடுக்க ரயில்வே கடிதம்..!

ஓசியில் பயணிக்கும் போலீசார்.. நடவடிக்கை எடுக்க ரயில்வே கடிதம்..!

Update: 2022-02-24 16:20 GMT

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களில் சிலர், பயணச்சீட்டு எடுக்காமல் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் காவலர்களிடம் பயணச்சீட்டு கேட்கும்போது, அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து, தெற்கு ரயில்வே சார்பில் தமிழக காவல் துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


அக்கடிதத்தில், ‘தமிழக காவலர்கள், எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கையில் அமர்ந்து முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணிப்பதாக பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அதிகப்படியான புகார்கள் வருகின்றன.

அவ்வாறு பயணம் செய்யும் காவலர்களிடம் டிக்கெட் பரிசோதகர் பயணச்சீட்டு கேட்டால், பயணச்சீட்டோ அல்லது அதற்கான ஆவணங்களையோ காண்பிக்காமல், தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விட்டு தொடர்ந்து அதே ரயிலில் பயணிக்கின்றனர்.

எனவே, காவலர்களுக்கு பயணச்சீட்டு குறித்த ஆவணங்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன், இதுபோன்று பயணிக்கும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘காவல் நிலையங்களுக்கு தேவைப்படும் ரயில் பயண பாஸ் குறைவான எண்ணிக்கையில் வருவதால் இதுபோன்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது’ என்று தெரிவிக்கின்றன.

Similar News