கண்ணில் கருப்பு துணி கட்டி பிரேமலதா ஆர்ப்பாட்டம்.. காரணம் இதுதான்..!

கண்ணில் கருப்பு துணி கட்டி பிரேமலதா ஆர்ப்பாட்டம்.. காரணம் இதுதான்..!;

Update: 2022-07-27 14:41 GMT

மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து ஜூலை 27-ம் தேதி தேதி காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று, மதுரை ஆரப்பாளையத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

அப்போது பேசிய பிரேமலதா, “கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சின்னத்தை அமைக்கப் போவதாக சொல்கிறார்கள். அவர்கள் தாராளமாக அமைக்கட்டும்.

ஆனால், மக்கள் வரிப்பணத்தில் அமைக்காமல், திமுக அறக்கட்டளை சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கட்டும். யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தேவையில்லாத ஒன்றாகும்.

மத்திய - மாநில அரசுகள் அரசை நடத்த மக்கள் மீது வரி விதிப்பதாக கூறுகிறார்கள். அது தேவையில்லை. ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியையும் சேர்ந்த அமைச்சர்களிடம் இருக்கின்ற ஊழல் பணத்தை வெளியே கொண்டு வந்தாலே அரசை தாராளமாக நடத்தி விடலாம்.

மக்கள் மீது தேவையில்லாத வரியை விதிப்பதை தவிர்க்கலாம். எனவே, மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தேமுதிக தொடர்ந்து எதிர்க்கும்” என்று கூறினார்.

Similar News