விசாரணை கைதி மரணம்.. மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு !!
விசாரணை கைதி மரணம்.. மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு !!
சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்ற ராஜசேகர் (31). இவர், பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார். இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக ராஜசேகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்வதற்காக போலீசார் ராஜசேகரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை போலீசார் கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக ஸ்டான்லி அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக இன்று நடைபெற்றது. போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in