மனைவியை கர்ப்பமாக்க கைதிக்கு 15 நாள் பரோல்.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
மனைவியை கர்ப்பமாக்க கைதிக்கு 15 நாள் பரோல்.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
ராஜஸ்தானில், வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நந்த் லால் (34) என்பவருக்கு பில்வாரா நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர், அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருடைய மனைவி ரேகா என்பவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளது. இதன் அடிப்படையில், எனது கணவரை விடுவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேத்தா, பர்ஜந்த் அலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. அப்போது, நந்த் லாலின் மனைவி நிரபராதி.
அந்த ஆணின் சிறை தண்டனையால் திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய அவரது பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுகின்றன.
எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஒவ்வொரு வழக்கின் தனித்தன்மையான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு, ஒரு கைதிக்கு சந்ததியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது.
தண்டனை கைதியின் மனைவி, சந்ததியைப் பெறுவதற்கான உரிமையைப் பறிக்க முடியாது. சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்த ஒரு நபரின் உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.
அதன் வரம்பிற்குள் கைதிகளும் அடங்குவர். எனவே, மனைவி கர்ப்பம் தரிக்க நந்த் லாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.