ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனை.. போட்டுத் தாக்கும் விஜயகாந்த்..!
ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனை.. போட்டுத் தாக்கும் விஜயகாந்த்..!
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனை இது” என்று, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்துகொண்ட ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை. செய்த பாவத்திற்கு ராஜபக்சே தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனையாகத்தான் இது பார்க்கப்படுகிறது.
இன்றைக்குத்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.