தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், “வெப்பச்சலனம் காரணமாக இன்றும் (28) நாளையும்(29) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வரும் 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்று (28-ம் தேதி) இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
நாளை (29-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (30-ம் தேதி) லட்சதீவு, தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.