இஸ்ரோ விஞ்ஞானியாக பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு !!
இஸ்ரோ விஞ்ஞானியாக பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு !!
இஸ்ரோ அறிமுகம் செய்துள்ள இளம் விஞ்ஞானி திட்டத்திற்காக நாடு முழுதும் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பல விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது பல குழந்தைகளின் கனவாக உள்ளது.
அதனை நிறைவேற்றும் வகையிலும், பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகயுவிகா பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டில் யுவிகா பயிற்சி முகாம் நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
அதன்படி, இஸ்ரோவின் 4 மையங்களில் மே 16 முதல் 28ஆம் தேதி வரை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்படும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2119 என்ற தொலைபேசி எண் அல்லது yuvika@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
newstm.in