ஐடிஐ பயிற்சியில் சேர அரிய வாய்ப்பு.. ஆன்லைன் மூலம் அப்ளை பண்ணலாம்..!
ஐடிஐ பயிற்சியில் சேர அரிய வாய்ப்பு.. ஆன்லைன் மூலம் அப்ளை பண்ணலாம்..!
ஐடிஐ பயிற்சிகளில் மாணவர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி தொழிலாளர் துறையின் பயிற்சி பிரிவு இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஐடிஐ பயிற்சி புதுவை அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குநரகம் மூலம் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி பிரிவுகளில் ஐடிஐ மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து படிக்க 8-வது மற்றும் 10-வது தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து 2022-ம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் https://centacpuducherry.in அல்லது https://labour.py.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் தங்கள் அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று கட்டணம் ஏதுமின்றி உதவி மையம் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.
பயிற்சி பற்றிய விவரங்கள் மற்றும் பயிற்சி பிரிவுகளின் தகவல்கள் அடங்கிய கையேடுகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 8300838089 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி பிரிவுகளில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.