எடப்பாடியை தொடர்ந்து திமுகவிடம் கோட்டையை இழந்த செங்கோட்டையன் !!

எடப்பாடியை தொடர்ந்து திமுகவிடம் கோட்டையை இழந்த செங்கோட்டையன் !!

Update: 2022-02-22 16:52 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டையாக கருத்தப்பட்ட கோபி நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கோபி நகராட்சியில் கடந்த 1996ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நல்லசாமி தலைவராக இருந்தார். பின்னர் 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை அதிமுகவை சேர்ந்தவர்களே தலைவர் பதவியை வகித்து உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 23 வார்டுகளை கைப்பற்றி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், நான்காவது முறையாக அதிமுக தலைவர் பதவியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் களம் இறங்கினார். இதற்காக அதிக வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், கோபி நகராட்சி முதல்முறையாக திமுக வசமாகியுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.  

அதிமுக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் கோபி தொகுதி, அதிமுகவின் கோட்டையாக இதுவரை இருந்து வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், தேர்தலுக்கு பிறகும் செங்கோட்டையனின் சகோதரர் காளியப்பன், அவரது மகன் செல்வம், செங்கோட்டையனுடன் மிக நெருக்கமாக இருந்த சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். இதுவும் அதிமுக தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.  

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி வசிக்கும், சேலம் மாநகராட்சி 23வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை 23வது வார்டு பகுதியில் வசித்து வருகிறார். இதில், நெடுஞ்சாலை நகர் 23-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார். 

newstm.in

Similar News