மசூதி, கோவிலில் ஒலிபெருக்கிகளை அகற்றுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!
மசூதி, கோவிலில் ஒலிபெருக்கிகளை அகற்றுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!
நாடு முழுவதும் உள்ள மசூதிகள், கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் வசிப்பிடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்ப தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் கர்நாடகத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக, மசூதிகளில் ஒலிபெருக்கியில் தொழுகையின் போது வெளிப்படுத்தும் சத்தத்திற்கு (அசான்) தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனாலும் மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபரப்பப்படும் சத்தம் இன்னும் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: “அசான் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும்.
இதை நல்லிணக்கத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அரசு விரும்புகிறது. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டும் சில அறிவுரைகளை கூறியுள்ளது.
அதனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதில் மீண்டும் ஒருமுறை உத்தரவு பிறப்பிக்கப்படும்” இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
அதன் பிறகு இந்த ஒலி மாசு விவகாரம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய பசவராஜ் பொம்மை, “ஒலி மாசு விவகாரத்தில் கோர்ட் உத்தரவை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதோ அங்கு ஒலி மாசு அளவை குறைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அத்தகைய ஒலிபெருக்கிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒரு தெளிவான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.