கச்சத்தீவு விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!!
கச்சத்தீவு விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!!
கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம், இருநாட்டு மீனவர்களுக்கும் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில் இந்தியா - இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழா வரும் மார்ச் மாதம் 11, 12ஆம் தேதியில் நடைபெற உள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த 500 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியர்களுக்கு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா பரவலை காரணம் காட்டி, இந்தாண்டும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, தமிழக மீனவர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத்தின் சார்பில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்று தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 பேராவது பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
newstm.in