புரட்சிகரமான பேச்சு.. ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் !!

புரட்சிகரமான பேச்சு.. ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் !!

Update: 2022-02-03 13:33 GMT

நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றிய ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இளைஞர்களுக்கு வேலையின்மை, வெளியுறவு கொள்கை தோல்வி உள்ளிட்டவை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழகத்தை பாஜகவால் ஒருபோது ஆட்சி செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதுவொன்றும் மன்னராட்சி கிடையாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது. இந்திய வரலாற்றில் எந்தவொரு பேரரசை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே மாநிலங்களை ஆள முடிந்துள்ளது எனவும் பேசினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தமிழக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்து  இதுகுறித்து திமுக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று (03.02.2022), திமுக தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:

இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை, இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர்ச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தன்மையும் பண்பாடும் அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தி பேச்சு அமைந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் தமிழ்நெறி செல்லட்டும். சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள், என கூறினார். 


 
newstm.in

Similar News