இலங்கையில் கலவரம்.. 5 பேர் உயிரிழப்பு.. 200 பேர் காயம்..!
இலங்கையில் கலவரம்.. 5 பேர் உயிரிழப்பு.. 200 பேர் காயம்..!
அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி உள்ளது.
இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கை பிரதமர் ராஜபக்சே கொழும்புவில் உள்ள மாளிகையில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாடு தப்பிச் செல்ல ஏதுவாக விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் அவர், உடல் நிலை தொடர்பாக சிகிச்சை செய்து கொள்ள வெளிநாடு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் ராஜபக்சேவின் பண்ணை வீட்டை தீயிட்டுக் கொளுத்தினர். அந்நாட்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர்.
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம், தொழிற்சாலைகள், கார்கள் போன்றவற்றையும் தாக்கினர். ஆளுங்கட்சியினர் தப்பிவிடாமல் இருக்க விமான நிலையங்களில் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது.
அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் கலவரம் தொடர்வதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கலவரம் நடக்கும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.