அரசு பஸ் நடத்துநர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அரசு பஸ் நடத்துநர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Update: 2022-05-14 14:53 GMT

பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘இன்று (14-5-2022) அதிகாலை 3.15 மணி அளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்தார். உயிரிழந்த அரசுப் பேருந்து  நடத்துநர் பெருமாள் பிள்ளை குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News