இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு..!

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு..!

Update: 2022-05-14 13:34 GMT

டெல்லியின் மேற்கு பகுதியில், முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக அலுவலக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி வணிக வளாக தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று முதல்வர் ஆய்வு செய்த பிறகு நிவாரணம் அறிவித்தார்.

Similar News