ரூ. 1,000 உதவித்தொகை... தமிழ்நாடு அரசு புதிய முடிவு..!!
ரூ. 1,000 உதவித்தொகை... தமிழ்நாடு அரசு புதிய முடிவு..!!
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமோ அல்லது நேரடியாகவே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 30) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன், கூட்டுறவு துறை உயரதிகாரிகள், நாளை மதியம், 3:30 மணிக்கு, காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர்.