சதுரங்க வேட்டை பாணியில் பிரபல நடிகரை நம்ப வைத்து ரூ.1.80 கோடி மோசடி!!
சதுரங்க வேட்டை பாணியில் பிரபல நடிகரை நம்ப வைத்து ரூ.1.80 கோடி மோசடி!!
இரிடியம் தொழிலில் முதலீடு செய்தால், 500 கோடி ரூபாய் கிடைக்கும் என்று நடிகர் விக்னேஷ் ஏமாற்றப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்களுக்கு பண ஆசையை தூண்டி எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதே சதுரங்க வேட்டை படத்தின் மையக் கருவாக இருந்தது. அதில் இரிடியம் என்ற பெயரை பயன்படுத்தி பணத்தை இருமடங்காக மாற்றி தருவதாக கூறி ஏமாற்றும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
படங்களை பார்த்தும், படிப்பறிவில்லாத மக்கள் ஏமாறுவது மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும் ஏமாறுவதுதான் வேதனை தருகிறது. அந்தவகையில், கிழக்கு சீமையிலே, ராமன் அப்துல்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விக்னேஷ், தான் ஏமாந்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில், கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் சொந்தமான கட்டடத்தில் உயர்ரக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். அந்த கடைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வாகனத்தில் வாடிக்கையாளரான ராம் பிரபு என்பவர் அடிக்கடி வருவார்.
அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு எனக் கேட்டதற்கு, இந்திய அரசாங்கத்தின் அனுமதியோடு, ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்திற்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால், தனக்கு பாதுகாப்பு வழங்கியதாக ராம் பிரபு தெரிவித்தார். மேலும் இரிடியம் தொழிலில் 5 கோடி ரூபாய் முதலீடு செய்தால், 500 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று, கூறி நம்ப வைத்தார்.
அவரை நம்பி 1,81,79,000 ரூபாயை, ராம் பிரபுவின் வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக அனுப்பினேன். இதனையடுத்து பல நாட்களாக கொடுத்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கொடுக்காததால், ராம் பிரபுவிடம் இதுகுறித்து கேட்டேன்.
அவர்மீது எழுந்த சந்தேகத்தால், அவரை பற்றி விசாரித்தபோது, ராம் பிரபு மோசடி நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பிரபுவிடம் இதுகுறித்து கேட்டேன். தன்னிடம் பணம் கொடுக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
தன்னைப் போல் பல பேர், ராம்பிரபுவிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக மோசடி நபர் ராம் பிரபு அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை காவல்துறையினர் பெற்றுத் தர வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடிகர் விக்னேஷ் அளித்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in