யூடியூப் மூலம் ஆசையை தூண்டி ரூ.400 கோடி மோசடி.. கணவன், மனைவி தலைமறைவு !!
யூடியூப் மூலம் ஆசையை தூண்டி ரூ.400 கோடி மோசடி.. கணவன், மனைவி தலைமறைவு !!
கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரும் வசதியாக இருந்தனர் விமல்குமார் (37), ராஜேஸ்வரி (35) தம்பதி. தம்பதிகள் 2 பேரும் சேர்ந்து காளப்பட்டியில் தலைமை அலுவலகத்தை தொடங்கி யூடியூப் சேனல் மூலம் பொதுமக்களிடம் அறிமுகமாகி போரெக்ஸ் டிரேட் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
அதில் முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் சேர்த்து மாதம் 8 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தனர். யூடியூப் மூலம் பிரபலமான இந்த தம்பதி கூறியதை நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்தனர். அதன்பின்னர் தான் தம்பதி இருவரும் மோசடியாளர்கள் என்பது மக்களுக்கு தெரியவந்தது.
பரமக்குடியை சேர்ந்த ஒருவர், தான் முதலீடு செய்த ரூ.16 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விமல்குமார், அவருடைய மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, விமல்குமார், ராஜேஸ்வரி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி பெயரில் லண்டனில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி உள்ளதாக கூறியும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக மாவட்டம் தோறும் அலுவலகம் தொடங்கி ஏஜெண்டுகளை நியமித்து உள்ளனர். அவர்கள் மூலம் அவ்வப்போது கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று உள்ளனர்.
முதலில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியுடன், பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர். இதனால் பலரும் முதலீடு செய்து உள்ளனர். அதன்பிறகு முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை கொடுக்காமல ஏமாற்றி மோசடி செய்து உள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் அம்பலமானது. அந்த வகையில் இதுவரை 400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள விமல்குமார், ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சுந்தராபுரத்தில் உள்ள விமல்குமாரின் வீடு, காளப்பட்டியில் உள்ள அலுவலகம், கோவைப்புதூரில் உள்ள ராஜேஸ்வரியின் பெற்றோர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
newstm.in