முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் பறிமுதல்!!
முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் பறிமுதல்!!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தது.
அதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகம் என திருவாரூர், திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ், மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.
இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் 1). முன்னாள் அமைச்சர் காமராஜ் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை, 2). Dr.M.K.இனியன், 3).Dr.M.K.இன்பன், 4). R.சந்திரகாசன் 5). B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் புலன் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி , தஞ்சாவூர் மற்றும் திருவாருர் மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் 08.07.2022 சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் பணம் ரூ.41,06,000/-, தங்க நகைகள் 963 சவரன், சுமார் 23,960 கிராம் வெள்ளி, ஐ-போன், கணிணி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.15,50,000 தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
newstm.in