பொது மக்களிடம் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாயை, இலங்கை மக்களுக்கு நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கினார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, தமிழக மக்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டி என்பவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று 10 ஆயிரம் ரூபாயை சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டி இன்று (16-ம் தேதி) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.


அங்கு, மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து தான் யாசகமாக பெற்ற பத்தாயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கினார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை மக்களுக்கு நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 50,000 வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.