உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொண்டுச் செல்லும் வெளிநாட்டு வாகனங்களை தாக்குவோம்.. ரஷ்யா எச்சரிக்கை !!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொண்டுச் செல்லும் வெளிநாட்டு வாகனங்களை தாக்குவோம்.. ரஷ்யா எச்சரிக்கை !!

Update: 2022-03-13 07:51 GMT

தங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தாக்குவோம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் கூறியதாவது, பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தையைத் தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும், ஏற்கெனவே பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. புதிதாக பேச்சுவாா்த்தை தொடங்கினாலும், தற்போதைய பாதுகாப்பு நிலவரம் முற்றிலும் மாறியுள்ளது.

தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயலாகும். அத்தகைய ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ரஷ்யா ராணுவத்தின் சட்டப்பூா்வ தாக்குதல் இலக்குகள் என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும், என அவர் தெரிவித்தார். 

உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஏராளமான படையினரைக் குவித்து வந்தபோது, அந்த நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்கும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரித்தன. அவ்வாறு படையெடுத்தால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்தன.

தற்போது அதுபோன்ற தாக்குதலும் நடந்துள்ளது, ரஷ்யா மீது பல்வேறு தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த விவகாரத்தில் ராணுவ ரீதியில் தலையிடப்போவதில்லை என்று அமெரிக்காவும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் தொடா்ந்து திட்டவட்டமாகக் கூறி வருகின்றன.

எனினும், ரஷ்யப் படையினரை எதிா்த்துப் போரிடுவதற்குத் தேவையான ஆயுத தளவாடங்ளை அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு அளித்து வருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் ரஷ்யா ராணுவத்தின் தாக்குதலுக்குரியவை என்று அந்த நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் எச்சரித்துள்ளாா்.


newstm.in

Tags:    

Similar News