சென்னையில் சசிகலாவிடம், டெல்லியில் டிடிவி தினகரனிடம் விசாரணை!!
சென்னையில் சசிகலாவிடம், டெல்லியில் டிடிவி தினகரனிடம் விசாரணை!!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் சென்னையில் 2ஆவது நாளாக விசாரணை நடைபெறும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லியில் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
கோடநாடு பங்களாவின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு, காலை 11 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணையை நடத்தினர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் முன்னிலையில் 8 போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு, சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
அப்போது, ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது என கூறிய சசிகலா, இதில், தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதற்கு போலீசாருக்கு துணை நின்று சாட்சி அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று அவர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சசிகலாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கோடநாடு பங்களாவின் சாவி வழக்கமாக யாரிடம் இருக்கும், துணை மேலாளராக பணியாற்றிய தினேஷுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பினர். அத்துடன், கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் ஜெயலலிதா அறையிலும், தங்கள் அறையிலும் என்னென்ன ஆவணங்கள் இருந்தன என்றும் சசிகலாவிடம் வினவினர்.
இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதே போல் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.டி.வி. தினகரன் இன்று மீண்டும் ஆஜராகிறார்.
இந்த வழக்கில் முன்னதாக கடந்த 12-ம் தேதி காலை 10.50 மணிக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அன்றைய தினம் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.
newstm.in