ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!!
ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!!
ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடைபெறும் என, டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, பல்வேறு தளர்வுகளை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அளித்துள்ளது.
அதன்படி, வரும் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் 1,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்றும், மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும் கூட, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, மாநில அரசு தீவிரமாக கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in