தன்னம்பிக்கையே வாழ்க்கை.. கைகள் இல்லா மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி..!
தன்னம்பிக்கையே வாழ்க்கை.. கைகள் இல்லா மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி..!
மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் லட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், லட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்.
பிறந்தபோதே இரண்டு கைகளும் இல்லாததாலும், பெண் குழந்தை என்பதாலும், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட லட்சுமி 2 வயது குழந்தையாக இருந்தபோது அவருடைய பெற்றோர் மயிலாடுதுறை அன்பகம் ஆதரவற்றோர் காப்பகத்தில் அவரை விட்டுச் சென்றுள்ளனர்.
அன்று முதல் அன்பகம் காப்பகத்தில் வளர்ந்த லட்சுமி, தான் படித்து பெரிய அளவில் சாதித்து சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என ஆர்வத்துடன் படித்து வருகிறார்.
இந்நிலையில், சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் படித்து தனது 12-ம் வகுப்பு தேர்வை ஆசிரியர் உதவியுடன் எழுதிய லட்சுமி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவரை, காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ - மாணவியர் பாராட்டி இனிப்பு வழங்கினர்.