தொடர் திருட்டு சம்பவம் – வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் கைது!!

தொடர் திருட்டு சம்பவம் – வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் கைது!!

Update: 2022-03-17 10:08 GMT

மதுரையில் பூட்டிய வீடுகளை நோட்டுமிட்டு தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அதற்கு உடந்தையாக இருந்த ஒரு வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்தங்குடி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பூட்டப்பட்ட வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் பூட்டை உடைத்து, வீட்டில் உள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற வீடுகளில் கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முருகன், கார்த்திக் கண்ணன், வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன், மாரிமூக்கன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் நான்கு பேரிடமிருந்து சுமார் 3லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், சுமார் 1லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் 18,700 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் மீது ஏற்கெனவே மூன்று வழக்குகள் இருப்பது தெரியவந்த நிலையில், நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருட்டு குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் ஒருவர்கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Similar News