ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தாலிபான்கள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் ஒருவரின் துணையின்றி ஆப்கன் பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை தாலிபான்கள் விதித்துள்ளனர். அதில், அரசு ஊழியர்கள் தாடி வைத்திருந்தால் மட்டுமே அலுவலங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இதையடுத்து அமைச்சரவை அலுவலகத்திற்குள் தாடி வைக்காமல் சென்ற அரசு ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த உத்தரவுக்கு தாலிபான் ஆதரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தாடி வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் ஒருபோதும் மக்களை வற்புறுத்தியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு உலக நாடுகள் ஆப்கானை தனிமைப்படுத்திய நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
அமெரிக்கா, சர்வதேச நிதியம், உலக வங்கி போன்றவை ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விட்டன. ஆனாலும் தலிபான்கள் உலக நாடுகள் அனைத்தும் எரிச்சலடையும் வகையில் விதிகளை வகுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in