அதிர்ச்சி! செல்போன் திருடிய நண்பன் அடித்துக் கொலை!!
அதிர்ச்சி! செல்போன் திருடிய நண்பன் அடித்துக் கொலை!!
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் முட்புதருக்குள் சக நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக இரண்டு பேர் சரணடைந்தனர்.
சென்னையில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண், அவர்களது நண்பர்களான துரைப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், கண்ணகிநகரை சேர்ந்த விஜய்(எ)மணி ஆகிய மூவரும் ஓஎம்ஆர் சாலையை ஒட்டியுள்ள முட்புதர் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அருகில் கிடந்த கல்லை எடுத்து அருண் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அருண் இறந்து கிடந்தது தெரியவந்தது. பயத்தில் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
மூன்று நாட்களாகியும் அருண் கொலையான தகவல் செம்மஞ்சேரி போலீசாருக்கு தெரியவராததால் கொலை செய்த சதீஷ் மற்றும் விஜய்(எ)மணி இருவரும் வழக்கறிஞர் ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய சென்றனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானால் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கும் ஆய்வாளருக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் செம்மஞ்சேரி போலீசாரை காப்பாற்றும் எண்ணத்தில் இருவரையும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சீனிவாசனிடம் வழக்கறிஞர் ஆஜர்படுத்தினார்.
பின்னர் கொலை சம்பவம் அரங்கேறிய பகுதிக்கு சென்று செம்மஞ்சேரி போலீசார் தலை நசுங்கி இறந்து கிடந்த அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருண் தங்களது செல்போனை திருடியதாக எண்ணி திட்டம் தீட்டி அருணை மதுகுடிக்க அழைத்து சென்றதும், அங்கு அருணிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் அருண் தலையில் கல்லை போட்டு விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.
அடுத்த நாள் வந்து பார்த்த போது இறந்தது தெரியவந்ததால் சரணடைய சென்றதாக போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in