அதிர்ச்சி! மீண்டும் தலை தூக்கும் குழந்தை விற்பனை!!
அதிர்ச்சி! மீண்டும் தலை தூக்கும் குழந்தை விற்பனை!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 3 மாத குழந்தையை விற்ற தாயை போலீசார் தீவிர தேடிவருகின்றனர்.
ஆண்டிபட்டி சின்னமநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த சின்னக் கருப்பன் என்பவரின் மனைவி அங்கம்மாள் (45) என்பவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவின் காரணமாக மீண்டும் கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த மாதம் 3ஆவது பெண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அங்கம்மாள், குழந்தையுடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த சென்றபோது குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர் கிருத்திகா, குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், மாயமான குழந்தை குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், குழந்தையை சில லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த, தாய் அங்கம்மாள் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவர் கிடைத்த பிறகே முழுமையான விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
newstm.in