அதிர்ச்சி! தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக் அப் மரணமா?

அதிர்ச்சி! தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக் அப் மரணமா?

Update: 2022-06-27 07:41 GMT

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்மனை அருகே முல்லைசேரிவிளை பகுதியை அஜித் (22) என்ற இளைஞர் தொழில் கல்வி முடித்துவிட்டு சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ஐயப்பன் என்பவரிடம், அஜித் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அஜித் 15 நாட்களுக்கு, தினசரி குலசேகரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 23ஆம் தேதி கையெழுத்திட குலசேகரம் காவல் நிலையம் சென்ற அஜித் வீடு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் குலசேகரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அஜித்தின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் அஜித் விஷம் அருந்தி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அஜித்தின் தந்தை சசிகுமாரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்தனர்.

இதனிடையே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித், கடந்த சனிக்கிழமை மதியம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.

தனது மகனின் உயிரிழப்பிற்கு குலசேகரம் காவல்துறையினரே காரணம் என கூறும் தந்தை சசிகுமார், அஜித்தின் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் குற்றஞ்சாட்டினார். புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, இவ்வழக்கை தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

newstm.in

Similar News